Sunday, September 06, 2020
ஆசிரியர் தினம்
Monday, August 24, 2020
மஹாகலைஞன்
Friday, August 21, 2020
பெயர்
Wednesday, August 19, 2020
உடன்பிறப்பு
Tuesday, August 18, 2020
குரு பீடம்
Saturday, August 15, 2020
அரவணை
Monday, August 10, 2020
ராஜம் ப்ரொவிஷன்ஸ்
ராஜம் ப்ரொவிஷன்ஸ்
உங்களுக்கு என்னுடைய முதல் பிசினஸ் அனுபவத்தை பற்றி சொல்லியே தீரவேண்டும். இதை சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு விருத்தாசலம் ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்லவேண்டும். ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் என்றவுடன் பெரிதாக நினைத்து விடாதீர்கள். கடையின் மொத்த அளவு நாலுக்கு மூணுதான் இருக்கும். இந்த ராஜம் என்னுடைய பாட்டிதான். என்னுடைய மாமா ஒருவருக்கு சரியானபடி வேலை கிடைக்கவில்லை. ஊரில் சில விடலை படங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதால் பாட்டிக்கு அதிகம் கவலை. உத்யோகம் புருஷ லக்ஷணம் என்பதால் இப்படி ஒரு ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் ஆரம்பித்து இருந்தார் என் மாமா. யாரவது பையன் என்ன பண்ணுகிறான் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு தோதாக இருந்தது.
இதையும் மீறி சிலர், கா காசு என்றாலும் கவன்மெண்ட் காசாகுமா? இந்த கடையெல்லாம் நமக்கு எதுக்கு என்று யாராவது மாமி வீட்டிற்கு வந்து வெறுப்பேற்றுவார்கள். இதை எல்லாம் மீறித்தான் இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் நடத்த வேண்டி இருந்தது.
இந்த கடையின் மூலதனம் ஏழெட்டு பெரிய பாட்டில்கள், இதில் பப்புறமுட்டாய், இலந்தவடை, மல்லாட்டை என்று சொல்லப்படும் வேர்க்கடலை, இன்னும் சில பிஸ்கட் வகைகள் இருக்கும். அப்புறம் கொஞ்சம் சணல் கயிற்றில் மேலிருந்து நான்கைந்து ஊறுகாய் அட்டைகள், கொழா பப்படம், கோபால் பல்பொடி, மலபார், காஜா பீடி மற்றும் ஒரு ஐஸ் போட்டியில் நாலு கலர் சோடா. இவைதான் கடையின் மொத்த ப்ரொவிஷன்ஸ். Turnover என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.
பாட்டி வீட்டின் முன் திண்ணையில் ஒரு பக்கம் மரப்பலகைகளை தடுத்து கடையாக்கி இருந்தார்கள். கடையின் பின் வழியே வந்தால் வீட்டு ஹாலுக்குள் வந்து விடலாம். இந்த கடைதான் என்னுடைய முதல் பிசினஸ் அனுபவம். கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு போகும்பொழுது, பல முறை இந்த ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் காஷியராக இருந்திருக்கிறேன். கடையின் முக்கியமான நேரங்கள் பக்கத்தில் இருந்த எலிமெண்டரி ஸ்கூல் ஆரம்பத்திலும் முடிவிலும் தான். ஸ்கூல் போகும் பையன்கள் போகிற வழியில் இலந்தவடை வாங்கி செல்வார்கள். மற்றபடி மதியம் கடையின் நிரந்தர கஸ்டமர்ஸ் ஊறுகாய் பாக்கெட், பப்படம் வாங்க வருவார்கள். ஒரு சில 'குடிமகன்கள்' பீடி, சிகரெட்டு வாங்குவார்கள். அநேகமாக இவர்களுடன் ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டுவிடும். கடை திறந்து இருக்கும்பொழுது எப்பவும் ஒரு ஆள் இருந்துகொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்து மறந்துபோனால் குரங்கு வந்து வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு போய்விடும். மத்தபடி மாமாவின் நண்பர்கள் சிலர் வந்து சினிமா, அரசியல் என்று பேசிவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் போவார்கள்.
இந்த கடையில் எனக்கு பிடித்த விஷயம் அந்த காளி மார்க் சோடா பெட்டிதான். தினமும் கடை திறப்பதற்கு முன் கடைத்தெருவில் போய் ஐஸ் வாங்கிவரவேண்டும். தெர்மக்கோல் பாக்ஸில் அதை போட்டு, சோடாக்கள் அடுக்கி வைக்கப்படும். இதில் மதியம் வெய்யில் தாக்கத்தால் அநேக நாட்கள் நானே குடித்துவிடுவேன்.
ராஜம் ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் பிசினஸ் ஓரளவிற்கு சூடு பிடித்திருக்கும் வேலையில் தான் வந்தது அதற்கு ஒரு சோதனை. எங்கள் கடைக்கு எதிர் சாரியில் கிட்டத்தட்ட இதே பிசினஸ் மாடலில் கிட்டு ஐயரின் கடை. இந்த கடை எங்கள் கடையை விட முதலீடு அதிகம். வழக்கமான ஊறுகாய், இலந்தவடையை தவிர நெய்வேலியில் இருந்து கம்பெனி மிட்டாய்கள் இறக்குமதி செய்யப்பட்டது. நியூட்ரின் சாக்லேட் அறிமுகப்படுத்தினார்கள். இதனால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த காம்பெடிட்டர் கடை ஸ்கூல் பையன்களை கவரும் வண்ணம் வண்ண வண்ண பப்படம், கேம்பா கோலா என்று பல புது யுக்திகளை செயல்படுத்தினார். அந்த கடையிலும் நான் சில நேரங்களில் கேஷில் உட்கார்ந்து இருக்கிறேன். ராஜம் ப்ரொவிஷனுக்கு வரும் வாடிக்கை கஸ்டமர் அந்த கடைக்கு போகும்பொழுது ஒரு குற்ற உணர்ச்சியுடன் எங்களை பார்த்துக்கொண்டே செல்வார்கள்.
கொஞ்ச நாட்களில் மாமாவிற்கு அரசாங்க வேலை கிடைத்து மெட்ராஸ் போகவேண்டியதால் ராஜம் ப்ரொவிஷன்ஸ் மூடப்பட்டது. பிறகு சில வருடங்கள் கழித்து இன்னொரு மாமாவிற்கு வேலை கிடைக்காததால் கடை மீண்டும் திறக்கப்பட்டது. அப்புறம் ரொம்ப நாட்கள் இதை தொடர முடியவில்லை.
இன்று எவ்வளவோ கிளைண்ட்ஸ் மீட்டிங், பிசினஸ் என்று இருந்தாலும், அந்த புளிப்பு மிட்டாயும், ஊறுகாயும் பாட்டிலில் இருந்து எடுத்துக்கொடுத்து சில்லறை கல்லாவில் போடும் சந்தோஷத்திற்கு ஈடு உண்டோ.
ரங்கா
Wednesday, August 05, 2020
கிழம்
ஆச்சு, இந்த புரட்டாசி வந்தா எனக்கு வயது, விபவவில் இருந்து விபவ அறுபது, சுக்ல பிரமோதூத..சார்வரி, சரி கொழப்பவில்லை. புரட்டாசி வந்தா 91. இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருப்பது சென்னை என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையில் எங்கு என்று மட்டும் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது. இரண்டு அல்லது மூன்று மதத்திற்கு ஒருமுறை என்னை பார்சல் செய்துகொள்வார்கள் என் இரு பிள்ளைகளும். கடைசியாக ஏதோ கோட்டூர்புரம் என்று சில வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. மற்றபடி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது.
மறதி வேற. ஒரு சில வருடங்களாகவே இந்த மறதி வந்து படுத்தி எடுக்கிறது. எனக்கு எவ்வளவு பிள்ளைகள் என்று குழப்பங்கள். அதனால்தான் இப்போ கொஞ்சம் நினைவு இருக்கும்போது எழுதலாம் என்று உட்கார்ந்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண். பெண்ணை கலியாணம் செய்து கொடுத்து பரோடாவில் செட்டில் ஆகிவிட்டாள். அவளுக்கும் இப்போ எழுவது வயது ஆகப்போகிறது. பிள்ளை பேரன் என்று அவள் குடும்பத்தை சமாளிப்பதிலேயே அவளுக்கு போய்விடுகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மெட்ராசுக்கு வருவாள். வந்த அம்மா அம்மா என்று மாய்ந்து போவாள். என்னோட வந்துடு, பரோடாவில் அணைத்து வசதியும் இருக்கு என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்வாள். ஒரு மாதம் கழித்து கிளம்பும் பொழுது பொங்கல் சேர அழைத்துக்கொண்டு போகிறேன். இப்போ உன்னால குளிர் தாங்கமுடியாது என்று கிளம்புவாள். எனக்கு இங்க தான் சாஸ்வதம். இன்னும் எத்தனை நாளோ என்று எண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்.
மறப்பதற்கு முன் என்னுடைய பழைய கதையை சொல்லி விடுகிறேன். என்னுடைய பெயர் கோகிலாம்பாள். கோகிலா பாட்டி என்று தான் எல்லோருக்கும் தெரியும். பூர்விகம் திருமணஞ்சேரி. மாயவரம் பக்கம். பெரிய அக்ரஹாரம். அநேகமா எங்கள் தெருவில் எல்லோரும் ஏதாவது ஒரு உறவாகத்தான் இருக்கும். காவிரி கரை. எங்கு பார்த்தாலும் வயல்வெளியும், தென்னைதோப்புகளாக இருக்கும். மூன்று கட்டு வீடு. இப்போ யாருக்கு தெரியும் மூன்று கட்டு வீடெல்லாம். எங்கள் வீட்டிற்கு பின்னால் தோட்டத்தின் வழியாக சென்றால் காவிரி கரையை அடைந்து விடலாம். சிறுவயது முதல் தினமும் காவிரியில் குளித்துவிட்டு எங்கள் ஊர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வருவது வழக்கம். சுவாமி பெயர் கல்யாணசுந்தரேஸ்வரர், அம்பாள் பெயர் கோகிலாம்பாள். கோவிலில் ஆள் அரவம் இருக்காது. இப்போலாம் நிறைய பேர் கூட்டமாக வருகிறார்கள் என்று கேள்வி. எங்கள் ஊர் கோவிலுக்கு சென்று வந்தால் கல்யாணம் சீக்கிரம் நடக்கும் என்று ஐதீகம். எனக்கும் பதினைந்து பதினாறு வயதில் விமரிசையாக கல்யாணம் செய்து வைத்தார்கள். என் அப்பா ஊரில் கொஞ்சம் சொத்து பத்து இருப்பவர் தான். வீருசாமி பிள்ளை நாதஸ்வரம், அரியக்குடி கச்சேரி, வலங்கைமான் வேட்டு என்று நான்கு நாட்கள் கல்யாணம். ஊரே ப்ரமாதப்பட்டது.
அவருக்கு பெயர் சபேசன். திருவிடைமருதூரில் இருந்து பெரிய கூட்டமே வந்து இருந்தது. கலியாணம் முடிந்த கையோடு இரண்டு பிள்ளையும், ஒரு பெண்ணும் பெற்றாகிவிட்டது. இரண்டு பிறந்தவுடன் இறந்துவிட்டது. பத்து வருடம் கூட முடியவில்லை, அவருக்கு வயிற்றுவலி எடுத்தது, ஒரு வாரம் அவதிப்பட்டது. கும்பகோணம், தஞ்சாவூர் என்று டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு கை விரித்துவிட்டார்கள். ஒரு வாரத்தில் உயிர் பிரிந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நான் தனி தான். ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்து வைக்கும் எங்கள் ஊர் சாமிக்கு என்னை இப்படி பார்ப்பதில்தான் ஆசையோ என்னவோ. ஏதோ சொத்து தகராறு, பங்காளிகள் சண்டை எல்லாம் முடிந்து எனக்கு கொஞ்சம் சொத்து கைக்கு வந்தது. இதற்குள் எங்கள் ஊரில் பலர் மெட்ராஸுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். நானும் ஒரு சில வருடம் ஊரில் போராடிவிட்டு, பிள்ளைகள் மேற்படிப்பிற்கு மெட்ராஸ் வந்தேன். இந்த மெட்ராஸ்ல தன்னந்தனியா அலையாத இடம் இல்லை. சில வருடங்களில் ஊரில் இருந்த நில குத்தகைக்காரர்களிடம் இருந்து வரும் கொஞ்ச நஞ்ச வருமானமும் நின்று விட்டது. கடைசியில் நிலமே இல்லை என்று ஆகிவிட்டது. இதற்குள் எங்கள் ஊரில் தெரிந்தவர்கள் யாருமே இல்லாததால் நிலங்களை முற்றிலும் இழந்துவிட்டோம். பிறகு கஷ்ட ஜீவனம்தான். காலையிலும், மாலையிலும் 4,5 வீடுகளில் சமையல் வேலை. கொஞ்சம் நன்றாக பாடுவேன். சனி, ஞாயிறு முழுதும் குழந்தைகளுக்கு பாட்டு கிளாஸ், கூடை பை பின்னி கொஞ்சம் வியாபாரம் என்று எப்படியோ பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிட்டேன்.
மூத்தவன் கல்யாணசுந்தரம், எங்கள் ஊர் ஸ்வாமியின் பெயர். அடுத்து பிச்சை என்கிற கிருஷ்ணமூர்த்தி.
இவர்கள்தான் என்னை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னால் கூட நான் கோவில், ப்ரவசனம், கச்சேரி என்று போய் விடுவேன். இப்பொழுது அதுவும் முடிவதில்லை. எங்க, இப்போ தெருவில் கால வெச்சாலே வண்டி சத்தம்.. அப்பப்பா. எதற்காக இந்த அவசரம். முன்னெல்லாம் தியாகராய நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் என்று நடந்தும் பஸ்ஸிலும் போய் இருக்கிறேன். இப்போல்லாம் தெருவில் எப்படி நடப்பது என்று தெரியவில்லை. தெருவை எப்படி கடப்பது என்று புரிவதில்லை. உலகத்தின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த பரபரப்பு, கூட்டம், கோபம் இதெல்லாம் எனக்கு புரிவதில்லை. ஒரு விநாடிகூட ஒரு இடத்தில நிற்கமுடிவதில்லை. தெருவில் காலை வைத்தால், பின்னாலயே ஒரு வண்டி வரது, கூட்டம் கூடி விடுகிறது.
என் பேரன்களும், பேத்திகளும் அமெரிக்கா, கனடா என்று இருப்பதால், என் இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி அங்கு போகவேண்டி இருக்கிறது. என்னை எங்க அழைத்துபோவது. நான்தான் இவர்களுக்கு ஒரு கால்கட்டு. இந்த கிழத்த வெச்சுண்டு எங்கயும் நிம்மதியா போகமுடியலியே, இது போன்ற சம்பாஷணைகள் அடிக்கடி காதில் விழுவதுண்டு.
வருஷாவருஷம் இவர்கள் அமெரிக்கா போகவேண்டி இருக்கிறது. இப்போகூட ஏதோ சீனியர் citizen ஹோம் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு இல்லை, அவர்களுக்கு. அங்கு போனால் பல வேலைகள் மிச்சம், சமைக்க தேவை இல்லயாம். என்னை என்ன செய்வது என்று பெரிய யோசனையாய் இருக்கிறது. நான் என்ன செய்யமுடியும். சுவாமி எப்போ கூப்படறாரோ. எனக்கென்ன தனிமை புதுசா. அறுபது வருடமாக ஒண்டி கட்டைதான். அவர் முகம் கூட மறந்து பல வருடமாகிவிட்டது. ஒரு போட்டோ கூட இல்லை.
இன்னும் எவ்வளவு நாள் இந்த ஜீவனம். எனக்கு திருமணஞ்சேரியில் போய் கண்ணைமூட ஆசைதான். என்ன செய்ய. நான் இப்படியே மாடிப்படி அருகே உட்கார்ந்துகொண்டு கொண்டு வருவோரையும் போவோரையும் ஏதாவது கேள்வி கேட்டுண்டு இருப்பேன். எனக்கு வேற வேலை இல்லை. கண்ணை மூடினால் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது. இதுல மறதி வேற. ஏதோ என் மனதில் இருப்பதை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் பழைய கதை எல்லாம் இப்போ எதற்கு. நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இந்த உலகில், என் கதையை படிக்க ஏது நேரம். படித்துதான் என்ன ஆகப்போகிறது.
ரங்கா
Sunday, August 02, 2020
வானப்ரஸ்தம்
பொதுவாக நம் ஹிந்து வழக்குப்படி வாழ்க்கையை நான்கு பாகங்களாக பிரித்து பார்க்கிறோம். முதலாவதாக ப்ரஹ்மசர்யம். நம் இளமை பருவங்களில் அநேகமான நேரங்களை கல்வி கற்பது, தன்னொழுக்கம், குரு பக்தி இப்படி செல்கிறது. பெரும்பாலும் நவீன கல்வி வழக்கிலும் இதைத்தான் செய்கிறோம். காலத்திற்கு ஏற்ப நம் பழக்க வழக்கங்கள் மாறி இருந்தாலும் இளமையில் கல் என்பது இன்றும் பொருந்துகிறது.
ப்ரஹ்மசர்யத்தை தொடர்ந்து க்ரிஹஸ்தாச்ரமம். இந்த முறைப்படி பொருள் ஈட்டுதல், குடும்பத்தின் மேம்பாடு, குழந்தைகளின் கல்வி, சமுதாய பொறுப்புடன் வாழ்க்கை முறை இப்படி இருக்கிறது. தர்மம், அர்த்த, காம மற்றும் மோக்ஷத்திற்கான வழியை நோக்கி செல்வது முக்கியமாகிறது. இதை இன்றும் ஆண் பெண் என்றில்லாமல் எல்லோரும் பெரிதும் கடைபிடித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து வானப்ரஸ்தம். இந்த வானப்ரஸ்த நிலையில் நம்மை அடுத்த கட்டங்களுக்கு தயார் செய்து கொள்ளும் முக்கியமான காலமாகிறது. இந்த நிலையில் அர்த்த, காமங்களை தொலைந்து மோக்ஷத்தை நோக்கி அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகிறது. சுமார் ஐம்பதில் இருந்து எழுபது வயது வரை வானப்ரஸ்த வாழ்க்கை முறை சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த வானப்ரஸ்த நிலையை பற்றித்தான் சில கருத்துகளை முன் வைப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். இந்த நவீன உலகமயமாக்குதலின்(Globalization) காரணமாக வானப்ரஸ்த நிலை பெரிதும் மாறி இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு (Post Retirement) என் தாத்தாவை பார்த்து இருக்கிறேன். தன்னுடைய முழு நேரத்தையும் கல்வி, ஆராய்ச்சி என்று மூழ்கி இருப்பார். அறுபது வயதில் இருந்து தன்னுடைய எண்பதாவது வயது வரை தினமும் 8-10 மணி நேரங்கள் ஏதேனும் புத்தகம் வாசித்து கொண்டு இருப்பர். இதை தவிர ஆன்மிக சர்ச்சை, பூஜை என்று மற்ற நேரங்களில். இதை தினமும் செய்வதால் சலிப்பு ஏற்படுவது இயற்கை. அதனால் சிறிது நேரம் கிரிக்கெட், டென்னிஸ், TV என்று ஈடுபடுத்தி கொள்வது வழக்கம். என் தாத்தா மட்டும் இல்லை, நிறைய வீடுகளில் இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படித்தான் வாழ்க்கையை நெறிப்படுத்தி கொள்வார்கள்.
இன்றைய கால கட்டங்களில் இந்த வாழ்க்கை முறைதான் மாறிவிட்டது. சமூக வலைத்தளங்களின் வருகையால் வானப்ரஸ்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. இன்றைய மாணவர்கள் Smart Phone தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதாக பெரியவர்கள் நினைக்கிறார்கள். மாறாக Smart Phone, computers இல்லாமல் இன்று பள்ளி/கல்லூரி படிப்பை கடக்க முடியாது. Smart Phone, Social Media தாக்கத்தினால் ஒரு சில பாதிப்புகள் இருந்தாலும், இவற்றை கடந்து வெற்றிகரமாக இன்றைய மாணவர்களால் செயல்பட முடிகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு smart phone, social media தாக்கம் இளைஞர்களை அதிகமாக இருக்கிறது நிதர்சனமாக தெரிகிறது. பல Facebook, WhatsApp குழுக்களில் இணைத்துக்கொண்டு தீவிரமாக கருத்து பரிமாற்றங்கள் என்று இவர்களின் வாழ்க்கையில் என்றும் இல்லாத ஒரு சுதந்திரத்தை காண்கிறார்கள். தங்களின் ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளி, கல்லூரி, பல அலுவகங்களில் வேலை, என்று இவர்களின் நட்பு வட்டம் பெரிது. இதை தவிர Family Groups என்று பலதரப்பட்ட குழுக்களில் இருப்பதால் இவர்களுக்கு கவசிதறல் (distractions) அதிகமாக ஏற்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் வரும் வீடியோக்களும், துணுக்கு செய்திகளும் share செய்யப்படுகிறது. Technology seems to have completely overwhelmed this age group. ஆழ்ந்த அறிவும், Deep learning, ஆன்மீகமும் social media குழுக்களில் photo/video பரிமாற்றத்துடன் முடிந்து விடுகிறது. ஆன்மிகம், விஞ்ஞானம், வரலாற்று புத்தகங்களில் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்களை உள்வாங்கும் பொறுமை இல்லையோ என்று தோன்றுகிறது. மேலும் பல அரசியல்/மதம் என்று சில குழுக்களால் மூளை சலவை செய்யப்பட்டு, தீவிர மத வெறியர்களாகவும் மாற்றி வருகிறது.
இந்த மாறுதல்களால் பின் வரும் சந்ததியினருக்கு தவறான எடுத்துக்காட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. தனி மனித சுதந்திரத்தினால் எனக்கு கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாமல் போனாலும், சமூக வலைத்தளங்களால் மூளை சலவை (brainwashing) அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. வானப்ரஸ்த வாழ்க்கை முறையில் குடும்ப வாழ்க்கையில் இருந்து பற்று இல்லாத வாழ்க்கையை நோக்கி செல்வதற்கு பதிலாக, உலக பற்று அதிகமாகி விடுகிறாற்போல் இருக்கிறது.
வானப்ரஸ்தத்தை தொடர்ந்து சந்நியாச வாழ்க்கை. இதில் பெரிதும் நம்மால் சாதிக்க முடிவதில்லை. மருந்து மாத்திரை, மருத்துவமனை யின் உதவியுடன் தான் நம் சந்நியாச நிலை கழிக்கவேண்டி உள்ளது. அதனால் நம் வாழ்க்கையை கடைத்தேற வானப்ரஸ்தம் ஒன்றுதான் சிறந்த நேரமாகிறது. மாற்றம் வரும் என்று நம்புவோமாக.
ரங்கா